History speaks KOUSIKA RIVER…வரலாறு பேசும் கௌசிகா நதி …

 கோவை அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்  பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் சாலையூர் அருகே  கௌசிகா நதியின் வடக்கு கரையில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் மண்ணின் மேற்பரப்பில் ஏராளமான மட்பாண்ட ஓடுகள் காணப்படுகின்றன. கோவையை சேர்ந்த அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கச் செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் அப்பகுதியில் காணப்பட்ட மட்கல ஓடுகள் சிலவற்றை சேகரித்து, ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைத்தார். அவ்வோடுகளை முறையாக தூய்மை படுத்தப்பட்ட போது  தாங்கியுடன் கூடிய உடைந்த குவளைப் போன்ற அமைப்பை கொண்ட மட்கலமொன்றின்  உடைந்த பாகத்தில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு

  செங்காவி பூச்சுப்பூசப்பட்ட உடைந்த மட்கல பாகத்தின் கீழ் வட்ட வடிவிலான தாங்குப் பகுதியின் மேற் பகுதியில் நான்கு தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள் உள்ளன. இவ்வெழுதுக்களை ஆய்வு செய்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அவர்கள்  ‘’ அ – ந் –த – ய் ‘’  என பொறிக்கப்பட்டிருப்பதாகவும். இவ்வேழுதுக்களின் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

     மேலும் அந்தை என்ற சொல் கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சார்ந்த மாங்குளம் தமிழ் பிராமிக் கல்வெட்டில் காணமுடிகிறது. குறிப்பாக சங்க இலக்கியமான புறநானூறில் பிசிராந்தையார் என்ற புலவரைப்பற்றிய குறிப்புகள் அவரது பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. எனவே கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதலே அந்தை , பிசிராந்தையார் போன்ற பெயர்கள் வழக்கில் இருந்துள்ளதை அறியமுடிகிறது. எனவே கௌசிகா நதிக்கரையில் கிடைத்துள்ள ‘’ அந்தய் ’’ என்ற பெயர் பொறிக்கப்பட்டவனின் உரிமைப் பொருளாக இம்மட்கலன் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மேலும் இதே பகுதியில் இருந்து கடந்த ஆண்டு தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடு ஒன்று கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 மட்கல ஓடுகள்

கௌசிகா நதிப்பகுதியில் செகரிக்கப்பட்ட மட்கல ஓடுகளில் கருப்பு – சிவப்பு நிற  மட்கல ஓடுகள், செங்காவி பூச்சு பூசப்பட்ட மட்கல ஓடுகள் , நன்கு மெருகேற்றப்பட்ட சிவப்பு நிற மட்கல ஓடுகளில் வெள்ளை நிற கோட்டு அலங்காரங்கள் கொண்ட மட்கல ஓடுகள், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகள், தானியங்கள் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான மட்பாண்டங்களின் உடைந்த பாகங்கள், அகல் விளக்கின் உடைந்த பாகங்கள் , சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட கழுத்தணிகள்  போன்றவைகள் கிடைத்துள்ளன. மேலும் மட்பாண்டங்களின் உடைந்த கழுத்துப் பகுதிகளில் விரல்களால் அழகு படுத்தப்பட்ட பூவேலைப் பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் விளையாட பயன்படுத்திய சில்லுக்கருவிகளும் இப்பண்பாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளன.

சுடுமண் குழாய்கள்

     சாலையூர் பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்கள் இரும்பை பிரித்து எடுப்பதற்காக ஊதுலை தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். உதரணமாக  15 சே.மீ நீளம் கொண்ட குழாய்யின் நடுப்பகுதியில் 2 செ.மீ. விட்டம் கொண்ட சுடுமண் குழாய்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. இக்குழாய்கள் ஊதுலையினுள் காற்று செல்வதற்காக அதன் மேற் பக்கங்களில் போருத்தப்பட்டவைகலாகும். மேலும் இப்பகுதியில் இரும்பு உருக்கப்பட்ட கசடுகளும் எராளமாகக் கிடைகின்றன. எனவே கௌசிகா நதிக்கரையில் வாழ்ந்த பழங்கால மக்கள் விவசாய உற்பத்திக்கான இரும்பு தளவாடப் பொருட்களையும், வேட்டையடுவதற்கு தேவையான இரும்பாயுதங்களையும் தயாரித்திருக்க வேண்டும்.

கற்கருவிகள்

      காய்களில் இருந்து விதைகளை எடுக்கவும், தானியங்கள் மீது உள்ள தோள்களை நீக்குவதற்காகவும், அவைகளை அறைப்பதற்காகவும் இப்பகுதி மக்கள் கையடக்க உருளை வடிவ கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். மேலும் சுத்தியல் போன்ற பயன்பாட்டிற்காகவும் கற்கருவிகளை கௌசிகா நதிக்கரை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கற்கருவிகள் மக்கள் வாழ்விடப்பகுதியான மட்கல ஓடுகள் கிடைக்கக்கூடியப் பகுதியிலேயே கிடைத்துள்ளன.

கௌசிகா நதிக்கரை நாகரிகம்

       சாலையூர் அருகே செல்லும் கௌசிகா நதி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குருடி மலையில் உற்பத்தியாகி கோவைமாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையம் , கோவில்பாளையம் , தெக்கலூர் வழியாகச் சென்று திருப்பூர் மாவட்டம் சுல்தான்பாளையம் அருகே நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்நதியின் மொத்த நீளம் சுமார் 52 கி.மீ. ஆகும்.  மேலும் கௌசிகா நதிக்கரையில் சங்ககால மக்கள் பயன்படுத்திய தொல் பொருட்களோடு தமிழ்பிராமி பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைத்திருப்பதால் இப்பகுதி கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டில் சிறந்த நதிக்கரை நாகரிகத் தளமாக விளங்கியுள்ளது எனலாம்.

          குறிப்பாக சங்ககால முதலே கொங்கு மண்டலம் கிரேக்க மற்றும் ரோமனியர்களோடு நேரடி வணிகத் தொடர்பு கொண்ட பெருமைக்குறியப் பகுதியாகும். இக்கொங்கு மண்டலத்தில் உள்ள கொடுமணல் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் பெருமளவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. தற்போது கௌசிகா நதிக்கரை பகுதியில் தமிழ் பிராமி கிடைத்திருப்பது அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கல்வியறிவு பெற்ற மேன்மக்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது என ஆத்தூர் அரசுக்கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

WE THANKS பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் SIR.

வரலாற்றில் கௌசிகா நதி …….
                         
 ஆறை நாட்டின் உப நாடாக கவைய நாடு (கௌசிகா நதி பகுதிகள் )வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்து உள்ளது.இந்த பகுதிகளில்   அகழ்வாராய்ச்சிக்கு தேவையான பல தடயங்கள் உள்ளது.     இப்பகுதிகள் சுமார் இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.முதலாம் இராசராசன் காலத்தில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டது.
 

ஆறை நாட்டு எல்லைகள் :

மதுக்கரை வாழையாற்றுக்கு வடக்கு , செங்கப்பள்ளி செங்கன்மாய் தங்கையாகிய காட்டுக்கன்னிமார் கோவிலுக்கு மேற்கு ,வண்டிக்கொட்டை வசையாபுரம் பவானி ஆற்றுக்கு தெற்கு,வெள்ளிங்கிரி மலைக்கு கிழக்கு ,மதுக்கரை மன்னாரை பெரியபாளையம் குளத்துக்கும், நொய்யல் ஆற்றுக்கும் வடக்கு ,குறப்பு நாட்டு எல்லைக்கும் மேற்கு எல்லைகளை உள்ளடக்கியது ஆறை நாட்டின் எல்லைகள் ஆகும்.  

 
ஆறை நாட்டு ஆறுகளும்,ஓடைகளும் :
 
நொய்யல் ஆறு ,நல்லாறு ,சன்னாசி பள்ளம் (கௌசிகா நதி ) வண்ணத்தங்கரை,நீளிப்பள்ளம்.
 
மலைகள் :
வெள்ளிங்கிரி மலை,மருதமலை ,காணுவாய் மலை,குருவ ரிஷி மலை ,பாலை மலை ,குறுந்த மலை, முத்துக்குமார் மலை,                  பெட்டத்தம்மன் மலை,அழகு மலை,சிரவனம்பட்டி குன்று,மலையப்பாளையம் குன்று போன்றவை ஆகும் .
 
 கௌமார மடாலயத்தின் தவத்திரு.கந்தசாமி அடிகளார் அவர்களின் கௌசை  புராணப்படி கௌசிக முனிவனர்  இங்கே யாகம் செய்ததனால் கௌசிகா புரி பெயர் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிடுகிறார்.ஆதி பெயர்கள் கவையன்புத்தூர் என்று ஓலைசுவடிகளும்,கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.
 
நன்றிகள் :(எடுத்து எழுதியது )
 
1.அருள்மிகு கவைகாளியம்மன் திருக்குட நன்னிராட்டு விழா மலர் குழு (2001)
1அ. கௌமார மடாலயத்தின் தவத்திரு.கந்தசாமி அடிகளார்
2.திரு.C .M .இராமச்சந்தரன் செட்டியார் எழுதிய கவைய காளிஅம்மன் வரலாறு 3.திரு.கா.மாரப்பன் MA,M.ED.வராலாற்று ஆய்வாளர் . 
4.புலவர்.ஐ.இராமசாமி ,தொல்பொருள் ஆய்வாளர்.
5.முனைவர் க.அ .புவனேஸ்வரி.
6.முனைவர் .இரா.கருணானந்தன்.கல்வெட்டு ஆய்வாளர்.
7.திரு.டி.ம் .காளியப்பா MA ,திரு.என்.கே.இராமசாமி எம்.எஸ்ஸி .